பிக் பாக்கெட்


 பேருந்தில் ஏறி அமர்ந்ததுமே மழை பிடித்துக்கொண்டது.... அவசர அவசரமாக ஜன்னல் கண்ணாடிகளை அடைப்பவர்களிடையே "அப்பா, அப்பா, மழை பார்க்கணும் ஜன்னலை மூடாதீங்க" என்கின்ற குழந்தையின்  கோரிக்கை அதட்டலுடன் நிராகரிக்கப்பட்டது . மனசுக்குள் சிரித்துக் கொண்டேன். மழை அமிர்தம், நனைதல் வரம் என்கின்ற வரிகள் ஏனோ நினைவுக்கு வந்தது ... 

படித்துறை தாண்டுவதற்குள் பேருந்து நிரம்பி வழிய, கண்டக்டர் வாய் ஓயாமல் எல்லோரையும் முன்னுக்கு வர சொல்லிகொண்டிருந்தார்... மழை நனைத்த கோழிகுஞ்சாய் ஒரு பாட்டி நடுங்கியபடியே இடம் தேட ... எழுந்து, அமர்வதற்கு இடம் கொடுத்தேன். 

எங்கே போகணும்...?

டவுன் ஹால் .... ஒரு டிக்கெட்... 

டிக்கெட் கொடுத்தவர்.... மீதி சில்லறை கொடுக்காமல் நகர, சார், ஐம்பது பைசா மிச்சம் கொடுக்கணும் என கேட்க தோன்றியது. கேட்கவில்லை.  கேட்க விடாமல் தடுத்தது    தாரளமா.. இல்லை யாராவது சிரிப்பார்கள் என்கின்ற கூச்சமா?  உள்ளுக்குள் புகைந்த கோபம் ஒரு கெட்ட வார்த்தையாய் சத்தமில்லாமல் வெளிப்பட....நகர்ந்து வந்து படியருகே நின்று கொண்டேன்... மழை சாரலை முகத்தில் வாங்கிக்கொண்டு திரும்பும் ஒரு அசந்தர்ப்பமான நொடியில்தான் அந்நிகழ்வை பார்த்தேன்.. அவனது வித்தியாசமான செய்கை  முதலில் புரியா விடினும் ஒரு விபத்து போல.. ஓரிரு நொடியில் அவனது விரல்கள்  அப்பெரியவரின் பேன்ட் பாக்கட்டில்  நுழைந்து வெளியேறின.. வெளியேறிய விரலிடுக்கில் இருந்த ஐநூறு ரூபாய் கற்றை அவனது பேண்டிற்குள் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் இடம் மாறியது...சூழ்நிலையின் தாக்கம் தாமதமாய் உரைக்க,   "பிக் பாக்கெட்"  "பிக் பாக்கெட்" என உரக்க கத்த வந்தவன் சற்றே தாமதித்தேன்,  அவனையும் அவனை சுற்றி நின்றவர்களையும் உற்று நோக்க, எல்லோருமே அவனுடைய  சொந்தகாரர்கள்  போல தெரிந்தார்கள்... இம்மாதிரி பிக் பாக்கெட் அடிப்பவர்கள் ஒரு குழுவாக, வாயில்  ப்ளேடு துகள்களோடு இருப்பார்கள் எனவும் பிரச்சனை சமயங்களில் அதை முகத்தில் துப்பி விட்டு தப்பிப்பார்கள் என்பதும் நினைவுக்கு வந்து தொலைத்தது. பேருந்தின் குலுங்கலில் இவை ஏதும் அறியா பெரியவர்  ஒரு கையால் கம்பியே பிடித்துகொண்டு மற்றொரு கையால் தன் ஹியரிங்  ஏய்டை காதில் பொறுத்த சிரமப்பட்டுக்கொண்டிருந்தார்.

எதை பற்றியும் கவலைபடாமல் மழை வெளியே கொட்டிக்கொண்டிருக்க என் உடல் முழுதும் வெப்பம் வழிந்தது... எப்படியும் அவனை பிடித்து கொடுக்க வேண்டும், அப்பெரியவருக்கு அவர் பணம் திரும்ப கிடைக்க வேண்டும் என நினைத்தவன், அப்பெரியவரை நோக்கி மெல்ல முன்னேற, அவரை சுற்றி இருந்தவர்களில் ஒருவன் என்னை பார்வையால் என்ன வென்று கேட்டான்.  அவன் பார்வையின் அர்த்தம் அவ்வளவு யோக்கியமானதாக இல்லை. ஒன்றும் இல்லையென தலையாட்டிவிட்டு அப்படியே நின்றேன்.

இதற்குள் பேருந்து ஒரு நிறுத்தத்தில் நிற்க, பெரியவர் அவசர அவசரமாக இறங்க எத்தனித்தார்.. எனக்குள் பெரும் கவலையும், ஏமாற்றமும் உருவாக, அவர் இறங்குவதை உதடுகள் துடிக்க வேடிக்கை பார்த்தேன். இறங்கியவர் யதோச்சையாக தன் பான்ட் பாக்கட்டில் கை வைக்க, தன் பணம் பறிபோனதை உணர்ந்து... "ஐயோ   ஐயோ" என் பென்ஷ......" அதற்குள் பேருந்து அவரை கடந்து விட்டிருந்தது  பேருந்தின் பின் கண்ணாடியில் மழைக்கு நடுவில்  அவர் தலையில் அடித்தபடி  பேருந்தை நோக்கி ஓடிவருவது  தெளிவில்லாமல் தெரிந்தது...

என் இயலாமை மீதான கோபத்துடன், நான் அவனை நோக்க, எதுமே அறியாதவன் போல விசிலடித்துக்கொண்டிருந்தான்.எப்படி இவர்களுக்கு மனது வருகிறது, அடுத்தவர் உழைப்பில் வாழ... இப்படியும் ஜென்மங்கள் இருப்பார்களா?  பாவம் அந்த பெரியவர்.. அவருடய மகள் திருமனத்திற்க்கோ,  அவர் மனைவியின் மருத்துவ செலவுக்கோ அவசியமாய் இருந்திருக்கலாம்.  இப்படி கீழ்த்தரமான மனிதனிடம் பறி கொடுத்துவிட்டு அவர் மனம் எவ்வளவு கஷ்டப்படும். என்னுள் எழுந்த ஆத்திரம் நிச்சயம் அவனை சும்மா விடகூடாது என்றது. இதற்குள் அடுத்த வந்த நிறுத்தத்தில் அவன் இறங்குவதற்காய் என்னை கடந்து செல்ல அவன் தோள் மீது கை வைத்து அழுத்தினேன்.. திரும்பி பர்த்தவனிடம்,
 "உன்கூட  கொஞ்சம் பேசணும் .. இறங்கு"

அவனோடு சேர்ந்து நால்வர் இறங்க,

'என்ன' என்று பார்வையாலேயே கேட்டான்...

"மனுஷனா நீ.., நான் பார்த்தேன், அந்த பெரியவரோட  பணத்தை அடிச்சதை நான் பார்த்தேன், உனக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே கிடையாதா ? இதல்லாம் ஒரு பொழப்பா? பாவம் அவரோ ., "
 மேற்கொண்டு பேசுவதற்குள்  "பொறு " என கைகளால் சைகை செய்தான், ஒரு நொடி என் கண்களை பார்த்தவன்,.  உடனே பேன்ட் பாக்கட்டில் கை விட்டு எடுத்த நோட்டு கட்டில் இரண்டை உருவி என் கைகளில் திணித்து விட்டு மெல்லிசாய் சிரித்தான், பின் விசிலடித்துக்கொண்டே சாவதானமாய் நடந்து செல்ல ஆரம்பித்தான்..

ஒரு விநாடி விக்கித்து நின்று, பின் சுதாரித்தேன், கையில் திணித்த நோட்டை மழை நனைக்காத படி உள் சட்டை பையில் வைத்துகொண்டு விடு விடு வென வீடு நோக்கி நடக்க துவங்கினேன்.

-------------------

(கதை கடியாக இருந்தாலும் கமெண்ட் இடவும், )

Comments

  1. நன்றாக இருக்கிறது வாழ்த்துகள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....