பதிவுலகில் நான் - தொடர் பதிவு

நண்பர் வினோவிற்கு என் நன்றிகள் பல.. பதிவுலகில் நான் என்னும் தொடர் ரயில் பெட்டியில் எனக்கும் ஒரு இடம் கொடுத்ததற்காக...   

1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

மனோ - A BABY FROM COIMBATORE ( சத்தியமா நான் குழந்தைதாங்க.. என் மனசில் .. என் சேஷ்டைகளில் ) 
 

2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

சாந்தாமணி(என் செல்ல அம்மா)  வச்சது மனோகரன். (அம்புட்டு அழகா இருப்பேனாம் சின்ன வயசுல.. இப்ப.... வேண்டாம் விடுங்க பொண்ணுக தொந்தரவு ஜாஸ்தி ஆயிடும்.)

என் மாமா  என்னை ஸ்கூல்ல  சேர்க்கும் போது மனோகர் ஆச்சு. 
அது அப்படியே நண்பர்கள் வட்டத்திலே  சுருங்கி மனோ ஆயிடிச்சு.  


3.
நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?

அது ஒரு சரித்திர பிரசித்தி பெற்ற நிகழ்வு. அன்றைய தினம் ஆயிரம் குறிஞ்சி மலர்கள் பூத்து, பெருமழை பெய்து, வானவில் ஒளிர்ந்தது. பயபடாதீங்க.. அப்பிடீன்னு எல்லாம் நான் கதை விட மாட்டேன்    வலையுலகம் ஒரு கடல். எடுத்த எடுப்புல நான் தொபுக்கடிர்னு குதிச்சிடலை. நான் ஒரு புத்தக புழு.... இல்லை இல்லை புத்தக எருமை. என் வாசிப்புக்கு வலையுலகம் நிறைய தீனி போட்டுச்சு.   ஒரு ரெண்டு வருஷம் பதிவுகளை படிக்கிறது மட்டும்தான் என் வேலை. அப்பவே நாமளும் பதிவுலகில் நாம கத்துக்கிட்ட, தெரிஞ்ச விஷயங்களை பத்தி எழுதணும் ன்னு ஆசை. ஒரு சுப யோக சுப தினத்தில்   எனக்கு தெரிஞ்ச விஷயங்களை எனக்கு தெரிஞ்ச நடையில் எழுத  ஆரம்பித்திருக்கிறேன்... இன்னும் நீந்த வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.


4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம் செய்தீர்கள்?

அந்த கொடுமையே ஏங்க கேட்கறீங்க. ஒரு பதிவை போஸ்ட் பண்ணிட்டு.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுவதை போல யாராவது வந்து படிப்பாங்களான்னு காத்துட்டு இருப்பேன். யாரும் வந்து படிக்கலைன்ன நம்ம பசங்களுக்கு போன் போடுவேன். என்னுடைய ப்ளாக் ன்னு சொல்லாமல்,  முகவரி மட்டும் கொடுத்து, மச்சான் இந்த ப்ளாக் பக்கம் போய் பாரு.. அம்புட்டு அம்சமா இருக்குது ன்னு ஒரு பிட்டை போடுவேன். அவனுகளும் போய் பாத்துட்டு, ஏன்டா உனக்கு வேலை வெட்டி இல்லன்னா, எங்களுக்கும் இல்லைன்னு நினைச்சியா ன்னு காறி துப்புவானுங்க... ஆன இப்ப அவனுங்களே சில சமயம் போன் போட்டு, மச்சான் நல்ல எழுதியிருக்கடா ன்னு சொல்லும் போதும் ரொம்ப சந்தோஷமா இருக்கும். அப்புறம் மற்ற பதிவர்கள் உதவியுடன் தமிலீஷ், தமிழ்மணம் பத்தி கேள்விப்பட்டு அதில் இனைச்சேன்.  வாசிப்பவர்கள் என்னையும் நம்பி கொஞ்சம் கொஞ்சமா இப்ப வர துவங்கியிருக்காங்க.. 


5.
வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?



என்னுடைய வாத்தியார் சுஜாதா சார் சொல்வார். "என்னுடைய எழுத்துக்கள் நூறு சதவீத கற்பனையும் இல்லை. நூறு சதம் உண்மையும் இல்லை. நான் பார்த்த, அனுபவித்த விஷயங்களை கொஞ்சம் கற்பனை சேர்த்து அதை சுவாரசியமாக்கி எழுதுகிறேன்" என்று. அது போலதான்.. என் எழுத்தும்..
விளைவுன்னு பார்த்தா.  என் காதலை.. என்னை நேசிப்பவளை பற்றி   நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  அதுக்காக அந்த பொண்ணு வீட்ல இருந்து எப்ப ஆட்டோ வரும்னு தெரியல. 


 
6.
நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா? அல்லது பதிவுகள் மூலம் சம்பாதிப்பதற்காகவா? 

 
பொழுது போக்குன்னு கூட சொல்ல முடியாதுங்க... படிக்கறது, எழுதறது எனக்கு ரொம்ப பிடிச்சமான விஷயம். ஒரு சந்தோஷத்திற்காக, நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளவதை போல நினைத்துதான் எழுதுகிறேன். நம்ம எழுத்தை மத்தவங்க படிக்கறதே பெரிசு.. இதுல சன்மானம் வேறயா... போங்க பாஸ். காமெடி பண்ணிக்கிட்டு..


7. நீங்கள் எத்தனை வலைப் பதிவிற்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப் பதிவு? 
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுங்க..  எனக்கு இங்கிலீஷ்ல எழுதறது பிடிக்காது (தெரியாதுங்கறது வேற விஷயம்) ஆகவே என்றும்.. எப்போதும்...தமிழ் மட்டும்தான். 

 
8. மற்ற பதிவர்கள் மேல் கோபம், அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆமாம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

பொதுவா எனக்கு கோபப்படறதே பிடிக்காது. பொறமைன்னு பார்த்தா நிறைய எழுத்தாளர்கள் மேல உண்டு. அதுக்கு காரணம் அவங்க எழுத்தை பற்றிய பிரமிப்பு. எனக்கு அதிஷா எழுத்துக்களில்  உள்ள ஈர்ப்பு, கேபிள் சார் எல்லா மொழி சினிமாவை பற்றி அலசுற விதம், ஜாக்கி அண்ணாவோட யதார்த்தமான  பக்கத்துல உட்கார்ந்து பேசறது போலான எழுத்து நடை,  யுவ கிருஷ்ணாவோட சமூக அக்கறை,  ஆதி தாமிராவின் கவிதை தனமான அனுபவங்கள்,  ப்ரியமுடன் வசந்தோட CREATIVITY , புதுசு புதுசா எதையாவது எழுதும் ஜில் தண்ணி, தினம் ஒரு கவிதை எழுதும் பனித்துளி சங்கர்னு நிறய பேர் பொறமை பட வச்சிருக்காங்க.. 

 

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டை பற்றி?


ப்ரியமுடன் வசந்த்.. எங்க வாத்தியார் சுஜாதா பத்தி எழுதியதற்காக அவரிடம் இருந்து வந்த முதல் கமெண்ட் தான் எனக்கு கிடைத்த பாராட்டு.  அப்புறம் ஆரம்பத்தில் இருந்து  தொடர்ந்து என் எழுத்தை வாசித்து கமெண்ட் போடும்  மோகன் குமார், எனக்கு போன் போட்டு பாராட்டிய புது பதிவர் பொன் சிவா,  எல்லோருக்கும் இந்த தருணத்தில் என் நன்றிகள். 


10. கடைசியாக- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டியது அனைத்தையும் கூறுங்கள்.


முகம் பாராமல்,  குரல் கேட்காமல், எழுத்தை மட்டுமே வாசித்து புது புது நண்பர்களை,  நட்பு உலகத்தை உருவாக்கும் பதிவுலகத்தில் நானும் ஒரு  பதிவர் என்பதில் எனக்கு ரொம்ப சந்தோஷமும், பெருமையும்.  வாசிப்பனுபவம் மட்டும் இல்லாது நல்ல நட்புக்கும் வழி வகுக்கும் இந்த கடலில் உங்களோடு நீந்தும் சக நண்பன்தான் நானும். 
எல்லோரையும் நேசிப்போம்.. நட்பு வளர்ப்போம். 


இந்த தொடர் பதிவை தொடர நான் அழைப்பது.. 

நண்பர் மோகன் குமார்
நண்பர் பொன் சிவா 
நண்பர் கலா நேசன் 

Comments

  1. மனோகரா..........

    ////அவனுகளும் போய் பாத்துட்டு, ஏன்டா உனக்கு வேலை வெட்டி இல்லன்னா, எங்களுக்கும் இல்லைன்னு நினைச்சியா ன்னு காறி துப்புவானுங்க... ///

    ஒய் பிளட் சேம் பிளட் :)

    அந்த பொன்னு வீட்லேர்ந்து ஆட்டோ வராது லாரி தான் :)

    என்னது என்ன பாத்து பொறாமையா சரி வாங்க ரெண்டு பேரும் சேர்ந்து அந்த ஆமைய புடிக்கலாம்

    நேர்த்தியான ஜாலியான பதில்கள் நண்பா :)

    நட்பு விரியட்டும் :)

    ReplyDelete
  2. நல்லா இருக்கு.... அதுவும் பதிவை பிரபல படுத்த நண்பர்கள்கிட்ட பேசி காறிதுப்பனதை நல்லா நனைச்சுவையா எழுதி இருக்க....

    நீ எப்பயுமே நம்ம சிஷ்ய புள்ளதான்.... என்னையும் குறிப்பிட்டு இருக்க நன்றி...

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் மனோ, பதிவு நல்லா வந்திருக்கு:)

    //மச்சான் நல்ல எழுதியிருக்கடா ன்னு சொல்லும் போதும் ரொம்ப சந்தோஷமா இருக்கும்.//


    நல்ல விஷயம் இதற்கும் சேர்த்து வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. நன்றி.. யோகேஷ், ஜாக்கி அண்ணா, ஜெட்லி, ரம்யா,

    இந்த பதிவில் நான் பார்த்து பொறாமைபடும் லிஸ்டில் ஒரு பெயரை விட்டுவிட்டேன். அது ஜெட்லி, மனிதரின் காமெடிக்கு நான் பயங்கர விசிறி. மன்னிக்க ஜெட்லி, உங்கள் பெயரை மறந்தமைக்கு.

    மனோ

    ReplyDelete
  5. சும்மா வள வளான்னு இல்லாமல் பதில்கள் ரொம்ப இயல்பா இருக்கு மனோ வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. பதில்கள் ரொம்ப இயல்பா இருக்கு மனோ வாழ்த்துக்கள். ஏற்கனவே தம்பி கோமாளியும் கூபிட்டுருக்கார். விரைவில் எழுதுகிறேன். (விதி யாரை விட்டது).

    ReplyDelete
  7. நல்ல நேர்மையான பதில்கள்

    ReplyDelete
  8. எல்லா பதில்களுமே இயல்பான நடைல..மனசுல இருக்கிறதை அப்படியே சொன்னதா இருக்குங்க....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....