கிரிக்கெட் காதலன்


மூர்த்தி வெகு அலட்சியமாய் பபிள் கம்மை மென்றபடி சுற்றி நிற்கும் பீல்டிங் வளையத்தை கண்களால் அளந்தான். லாங் OFF , லாங் ஆன் இரண்டு புறமும் பீல்டர்கள் ஆணி அடித்தது போல நிற்க, எதிரணி கேப்டன்  மேலும் இருவரை லெக் சைடில் நிற்க வைத்து பாதுகாப்பு அரண் அமைத்தான். இரண்டே பந்துகள் 10 ரன்கள் தேவை. கடைசி பந்தில் மூர்த்தி அடித்த பவுண்டரி ஆட்டத்தை சூடு கிளப்பி வைத்திருக்க மொத்த கூட்டமும்  கண் இமைக்க மறந்து நகம் கடித்தது.. அந்த பௌலேர் உள்ளங்கை வியர்த்திருக்க , தரையில் கைகளை தேய்த்து கொண்டான். கேப்டன் அவனிடம் தீவிர ஆலோசனை செய்து  அவன் முதுகை தட்டி கொடுத்து உற்சாக படுத்த,  அந்த பௌலேர் சற்றே நிதானித்து.. சீராக அடி எடுத்து விக்கெட்டை நோக்கி ஓடி வர.. மூர்த்தி ஒரு முறை உடலை குலுக்கி ரிலாக்ஸ் செய்து கொண்டான். அந்த பௌலேர் சரியான லைன் அண்ட் லென்த்தில் விக்கெட்டிற்கு நேராக அசுர வேகத்தில் எரிய.. மூர்த்தி விடு விடுவென  ஸ்டெம்ப்பை கடந்து திரும்பி நின்று .. கிட்டத்தட்ட தற்கொலைக்கு இணையான ஷாட் அது..  நேராக கீப்பரின் தலைக்கு மேல் பந்தை அறைந்து  அனுப்ப.. அது இரட்டை வேகத்துடன் எல்லை கோட்டை தாண்டி சிக்சராக மாறியது. மைதானம் கைதட்டல்களால் அதிர.. மூர்த்தி ஒன்றும் அறியதாவன் போல பபிள்கம்மை மென்றபடி நின்றான். கடைசி பந்து.. வெற்றிக்கு தேவை 4 ரன்கள். இம்முறை மூர்த்திக்கு அந்த பௌலேர் பெரிதாய் வேலை வைக்கவில்லை. ஒரு வித பயத்துடனும் பதட்டத்திலும்  யார்க்கராய் வீச முயன்ற பந்து புல் டாசாக மூர்த்தியின் இடுப்பளவு உயரத்தில் வர , அழகாக லெக் சைடில் திருப்பி அதையும் சிக்சராக மாற்ற மொத்த கூட்டமும் ஆர்பரித்தபடி  மூர்த்தியே நோக்கி ஓடி வந்து அவனை தூக்கி வைத்து கொண்டாடியது.

மூர்த்திக்கு இது ஒன்றும் புதிதில்லை. எங்கள் கல்லூரியின் ஸ்டார் பேட்ஸ் மேன். கிரிக்கெட்டை ஒரு தவம் போல, கடவுளை விட அதிகமாக நேசிப்பவன். நீங்கள் அவன் விளையாடும் ஸ்டைலை பார்த்தாலே தெரியும்.. ஒரு தேர்ந்த சிற்பி போல, அவ்வளவு நுணுக்கமாய் இருக்கும் அவனது புட் ஓர்க்கும், ஷாட்  செலெக்ஷனும்.  அவன் பிட்சில் இருந்தாலே எதிரணி ப்ளேயர்களுக்கு எதோ மலச்சிக்கல் வந்தது போல ஒரு இறுக்கமான சூழல் நிலவும். எப்பேர்ப்பட்ட இலக்கையும் அலட்சியமாக விரட்டுபவன். அவனை அவுட் செய்வது  நிச்சயம் அவ்வளவு எளிதான விஷயம்  அல்ல.

விவசாய குடும்பம், சுமாராக படிப்பான். செமஸ்டர் சமயங்களில்  உரு போட்டு எப்படியாவது பாஸ் செய்து விடுவான்.  வகுப்பில் இருக்கும் நேரத்தை விட கிரௌண்டில் இருக்கும் நேரமே அதிகம். நாங்கள் எல்லோரும் சும்மா ஜாலிக்காக  கிரிக்கெட் விளையாடினால் அவன் எதோ கிரிக்கெட் தன் வாழ்வியலோடு ஒன்றிணைந்த விஷயம் போல அனுபவித்து ஆடுபவன். நிறைய டெக்னிகல் விஷயங்கள் சொல்லி கொடுப்பான். அவன் சொல்லுவதை காது கொடுத்து கேட்க வேண்டும். இல்லையேல்  தலையோடு சேர்த்து அடிப்பான். புகை, குடி, பாக்கு என எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.  யாரேனும் தண்ணி பார்ட்டி கொடுக்கும் போது, சண்டையிட்டு தன் பங்காக பணத்தை  வாங்கி கொள்பவன், அதில் சின்ன பொடியன்களுக்கு பேட்டும் , பந்தும் வாங்கி கொடுப்பதை நாங்கள் ஆச்சரியமாய் பார்ப்போம். 

முந்திய நாள் இரவில் கண்ட மலையாள படத்தையும், மிட் நைட் மசாலா பற்றியும் நாங்கள் விவாதித்து கொண்டு இருக்கும் போது, கென்யாவிற்கும்,  பங்களா தேஷிக்கும் இடையே நடந்த டெஸ்ட் போட்டியே நடு நீசி வரை பார்த்துவிட்டு வந்து சிலாகித்து சொல்வான். இதை எல்லாமாடா  பார்க்குற ? என்று கேட்டால், யார்  விளையாடுறாங்க   என்பது முக்கியமில்லை, கேம்தான் முக்கியம் மாப்பிளை என்பான். அவன் ஒருவனை வைத்து கொண்டே கல்லூரியில் மூன்று வருடங்களாக எங்கள் செட்  கிரிக்கெட் சாம்பியன் என சுற்றிகொண்டிருந்தோம். இதற்காய் துளி கூட அவன்  கர்வபட்டதில்லை. ஒரு விதத்தில் பார்த்தால் கிரிக்கெட் தவிர மற்றது ஏதும் அறியா அப்பாவி.

கல்லூரி காலம் முடிந்து நாங்கள் திசைக்கு ஒன்றாக பிரிந்தாலும், எங்கள் நட்பு வட்டம் சுருங்கவில்லை. அலைபேசியிலும், ஆர்குட்டிலும், ட்விட்டரிலும் நட்பினோம். மூர்த்தி தன் கிரிக்கெட் ஆட்டம் தடை பட்டு விட  கூடாதென சொந்த ஊரை விட்டு வெளிய வர மறுத்து உள்ளூரிலேய சொந்தமாக துணி வியாபாரம் செய்து வந்தான்.  தீடிரென போன் செய்வான். "மச்சான், குன்னத்தூர் டீமோடு விளையாடி செஞ்சுரி போட்டேண்டா" என்பான். ஞாயிறு முழுவதையும் கிரிக்கெட்டிற்காக  அர்ப்பணித்து விடுவான்.  நீங்கள் சொர்கத்திற்கே அழைத்தாலும்  ஞாயிறன்று மைதானத்தை விட்டு வெளிய வர மறுத்து விடுவான்.

சுற்றி இருக்கும் ஊர்களில் நடக்கும் எல்லா கிரிக்கெட் டோர்ணமண்டுகளிலூம்   மூர்த்தி தவறாமல் இருப்பான். இவன் அணி ஆடாத சமயங்களில் கூட மற்ற அணியினர்  இவனை தங்கள் அணிக்காக ஆட அழைத்து செல்வதுண்டு.  மெல்ல மெல்ல அவனது பெயர் மாவட்ட அளவில் பிரபலமாக ஆரம்பித்தது. சில போட்டிகளில் அவன் ஆட வருகிறான் என்றாலே போட்டி அமைப்பாளர்கள் அவன் டீமை சேர்க்க தயங்கிய சம்பவங்களும் நடந்தது. அந்த அளவிற்கு போகும் இடமெல்லாம் ரன்களை அடித்து நொறுக்க,  வீட்டில்,  T V ஸ்டாண்டில் டிவிக்கு பதிலாக   கோப்பைகளாய் குவிந்து கிடக்கும். வைக்க இடமில்லாமல் பாதி கோப்பைகளை மூட்டை கட்டி பரன் மேல் வைத்திருப்பதாக அவன் கூறுவதை நீங்கள் நம்ப மறுத்தாலும் உண்மை அதுவே.

இந்த கதை மூர்த்தியின் கிரிக்கெட் பராக்கிரமங்களை பற்றியது அல்ல... மூர்த்தியின் தெய்வீக காதல் பற்றியது. ஆம். மூர்த்தி காதலித்தான் என்பது நம்பவே முடியாத ஆனால் நடந்துவிட்ட ஒரு ஆச்சர்யம். உள்ளூர் அளவில் பிரித்து மேய்ந்து கொண்டிருந்தவனை நாங்கள் நண்பர்கள் அனைவரும் நச்சரித்து மாநில அளவில் விளையாட முயற்சி செய்யுமாறு கூற, ஒரு நல்ல நாளில் சென்னை கிளம்பி சென்றான். சென்றவன் இரண்டே நாட்களில் வெறுப்போடு திரும்பினான். "மச்சான், அங்க எல்லாமே காசும், சிபாரிசும் மட்டும்தாண்டா. திறமைக்கு அங்க மதிப்பில்லை". என்றவன் அந்த முயற்சியே கை விட்டாலும், அங்கு இருந்த பயிற்சியாளர் ஒருவர், இவனின் ஆட்ட திறமையே கண்டு தன் பயிற்சி மையத்தில் வந்து சேர சொல்ல, வாரம் ஒரு முறை  சென்னை சென்று பேட்டிங் பயிற்சி செய்து கொண்டிருந்தான். 

அவன் காதல் பற்றிய செய்தி எங்களுக்கு  சென்னை B2 போலீஸ் ஸ்டேஷன் தொலைபேசி வழியாகத்தான் முதன் முதலில்  தெரிய வந்தது. தொலைபேசியில் தான் போலீஸ் கஸ்டடியில் இருப்பதாகவும், வந்து காப்பாற்றுமாறும்  கதற, ஒன்றும் விளங்காமல் ஒரு வக்கீலை அழைத்து கொண்டு சென்னை விரைந்தோம். ஜாமீனில் அவனை மீட்டெடுத்து விசாரித்த போதுதான், தான் சென்னையில் ஒரு பெண்ணுடன் பழகி காதல் வயப்பட்டதாகவும் , அவள் அப்பா பெரிய ரியல் எஸ்டேட் அதிபர் எனவும், காதல் விஷயம் வீட்டிற்கு  தெரிந்து,  பெண்ணை பார்க்க அவள்  வீட்டு பக்கம் வந்தவனை வீட்டு சுவர் ஏறி குதித்து திருட வந்தான் என போலீசில் ஒப்பைடைத்த விதத்தையும் ஒப்புவித்தான்.

ஒரு மாதிரியாக போலீஸ் பிரச்சனைகளை சமாளித்து அவனை ஊர் கொண்டு வந்து சேர்த்தாலும், பயல் விஜி, விஜி, என அந்த பெண் பெயரயே பிதற்றிக்கொண்டு ஒரு மாத தாடியோடு கிரிக்கெட் கூட விளையாடாமல்  சுற்றிகொண்டிருந்தான். போனில்  அவனை அழைத்து உன் கவனத்தை கிரிக்கெட்டில் திருப்புடா.. பொண்ணுகளை நம்பாதே என்றதற்கு . மாமா, கிரிக்கெட் விளையாட மனசும், உடம்பும் தெம்பா இருக்கணும். இப்ப எங்கிட்ட ரெண்டுமே இல்ல என்றான்.

ஒரு மாத  முடிவிற்குள், தீடிரென அவனிடமிருந்து போன். மச்சான், விஜி வீட்டை விட்டு ஓடி வந்துட்டடா... அவ குடும்பம், சொத்து எல்லாத்தையும் விட்டுட்டு நான்தான் முக்கியம்னு  என்னை தேடி இங்கேயே வந்துட்டாடா. யாருக்கும் தெரியாம சிவன் மலையில் வச்சு கல்யாணம் பண்ணிட்டோம்டா... சாரி டா.. உங்களை யாரும் கூப்பிட முடியல.. வர வியாழகிழமை ஊர்ல RECEPTION . நீ கண்டிப்பா வரனும் டா.. என்றான். சந்தோஷம் பொங்க வாழ்த்து சொன்ன நான் தீடிர் அலுவல் விஷயமாக மும்பைக்கு துரத்தியடிக்க பட.. அவன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போனது.

இடைப்பட்ட தினங்களில், ஒரு மகானுவன், என் முகத்தையும், உத்தியோகத்தையும் நம்பி தன் பெண்ணை எனக்கு தருவதாக சொல்ல, என்னுடைய கல்யாண ஏற்பாடுகள் நடக்க துவங்கியது. , அழைப்பிதழ் கொடுப்பதற்காய் மூர்த்தியே தேடி அவன் வீட்டிற்க்கு சென்றேன்.

நான் போன சமயம், மூர்த்தி பெருமாநல்லூர் அணிக்காக ஒரு T -20 மேட்ச் ஆட போயிருப்பதாகவும் மதியத்திற்குள் வந்து விடுவேன், வீட்டில் காத்திரு என்றும் சொன்னான். அவன் காதல் மனைவியே பார்த்து வாழ்த்து சொல்வதற்க்காய்  அவன் வீட்டில் நுழைய, அந்த பெண் விஜி நல்ல வெட வெடவென உயரமாய் , கொஞ்சம் ஒடிசலாய் இருந்தாள். என்னை வரவேற்று எனக்கு காப்பி வைத்து கொடுத்தவளிடம் " உங்க புருஷனை எப்படி சமாளிக்கிறீங்க.. இன்னமும் கிரிக்கெட் கிரிக்கெட்ன்னு ஊரை சுத்திட்டு இருக்கான். நாள் பூர கிரிகெட்டை மட்டும் பேசி உங்களை ஒரு வழி பண்ணியிருப்பானே" என்றேன். அதற்க்கு அவள், எனக்கும் கிரிக்கெட் தாங்க உயிரு. அவர் கிரிக்கெட் ஆடற அழக பார்த்துதான் அவரை நான் லவ் பண்ணினேன் என்றாள்.

பரவயில்லையே.. உங்களை மாதிரி பொண்ணுகளும், கிரிக்கெட் மேல ஆர்வமா இருக்கிங்களே என்றதற்கு,  சிரித்துகொண்டே , ஆக்சுவலா, நானும் ஒரு பிளேயர் தாங்க.. பாஸ்ட் பௌலேர், தமிழ்நாடு உமென்ஸ் அண்டர் 19 .  நைரோபில இப்போ நடந்துட்டு இருக்குற  உமென்ஸ் வேர்ல்ட் கப் டீம்ல என் பெயரும் இருந்துச்சு. கல்யாணம் ஆனதாலே இப்போ இங்கே இருக்கேன் என்றாள். ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஒரு சேர அவளை பார்த்தபடி, என்ன சொல்றிங்க, மூர்த்தி கிட்ட சொல்லியிருந்தா உங்களை எப்படியும் விளையாட வச்சுருப்பானே.. என்றதற்கு, ஒரு முறை என்னை நிமிர்ந்து பார்த்தவள், மெலிதாக சொன்னாள். " அவருக்கு நான் கிரிக்கெட் விளையாடினா பிடிக்காதுங்க" 

---------------------------------------
கதை கடியாக இருந்தாலும் கமெண்ட் இடவும்..

Comments

  1. // " அவருக்கு நான் கிரிக்கெட் விளையாடினா பிடிக்காதுங்க" //

    நிதர்சனம் இதுதானோ?

    ReplyDelete
  2. நைஸ்.. இன்னும் கொஞ்சம் ஷார்ட் பண்ணியிருக்கலாமோ..:)

    ReplyDelete
  3. கதை கடியாக இருந்தாலும் //
    அப்படியெல்லாம் இல்லீங்க..!

    கமெண்ட் இடவும்.//
    ரைட்டு..:))

    ReplyDelete
  4. 'கொஞ்சம்' நீளமென்றாலும் கதை மிகவும் நன்றாக இருந்தது!

    ReplyDelete
  5. Typical men's mentality

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....