நொறுக்கு தீனி - 5 - (04.06.12)

சென்னை - ஒரு ஆச்சரியம்



நான் சென்னைக்கு வந்து இத்தோடு ஒன்றரை வருடங்களுக்கு மேலாகி விட்டது. சொந்த ஊர் பாசம் சென்னையின் மீது ஒரு பிடிப்பை கொடுக்க மறுத்தாலும், சென்னை மீதான என் ஆச்சரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் வருகிறது. சென்ற வாரத்தின் ஒரு நாளில், நாங்கள் குடியிருக்கும் போர்ஷனில் மீதமுள்ள ஒரு வீட்டிற்க்கும் ஆள் வந்தாயிற்று. சொந்த ஊர் மதுரை.  பக்கத்தில்  இருக்கும் இரு போர்ஷன்களில் குடியிருப்பவர்களில் ஒருவர் காரைக்குடி... மற்றொருவர் நாகை. நான் கோயம்புத்தூர். ஆக... எல்லா ஊர் பயல்களும் நீக்கமற நிறைந்து கிடக்கிறார்கள். வருபவர்கள் எல்லோருக்கும் வேலை வாய்ப்புகளையும், வாழ்வின் ஜீவாதரங்களையும் சென்னை பகிர்ந்து கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறது. நான் திருப்பூரில் இருக்கும் போது கவனித்ததுண்டு... மதுரை, தேனி என தினம் தினம் பனியன் கம்பெனி வேலையே நம்பி புதிது புதிதாய் வருபவர்கள் பல நூறு. திருப்பூர் சொந்த மாநில ஆட்களுக்கு வேலை வாய்ப்பை கொடுத்தால்... சென்னை... பல மாநில ஆட்களுக்கும் வாழ்கையே கொடுத்துக்கொண்டிருக்கிறது. தினமும் சென்ட்ரலில், எக்மோரில் அழுக்கு சட்டை, உடைந்த பெட்டியுடன், பான், குட்கா மென்று கொண்டே பயணிக்கும்  பல நூறு வட இந்தியர்களை நாம் கடந்து கொண்டேதான் இருக்கிறோம். இத்தனை ஆட்களையும் சென்னை அதன் குறுகிய வட்டத்திற்குள் எப்படித்தான் தாங்கிக்கொண்டிருக்கிறது... ? சென்னையின் உண்மையான மண்ணின் மைந்தர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள்... என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்...?



இசை ராஜா

மின்சாரம் இல்லாத இரவு...  புழுக்கம் தாங்காமல் பால்கனியில் படுத்துக்கொண்டிருக்கிறேன்... மொபைல் போன் பண்பலையில்... " ஓ பட்டர் ப்ளை " என குரல் வழிந்தோடுகிறது...  அவ்வளவு நேரம்  வீசாத  காற்று  இப்போது  மெல்லிசாய் வீச....  எப்படி உறங்கிபோனேன்... தெரியவில்லை.. கொஞ்ச நேரத்தில்... "ஜனனி ஜனனி" என தூரத்தில்  எங்கோ  ஒரு காந்த   குரல்  என்னை அதன் பக்கம் இழுக்கிறது... தூக்கம் களைந்து போக... இப்போது அந்த ஜீவ ஒலி காதுகளில் தெளிவாக... "கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே... நின்ற நாயகியே இட பாகத்திலே.."  என மெய் சிலிர்க்க  வைக்க....  மெல்ல கண்  திறந்து  வானம்  பார்க்கிறேன்... நிலா சிரிக்கிறது. 

ராஜா..  இசையின் ராஜா... கோடானுகோடி மக்களை ஒரு சேர  தாலாட்டும் தாய். என்னை சிரிக்க..அழ.. உருக... உணர... என பண்படுத்திய தகப்பன்... வாழ்க பல்லாண்டு.   

தங்கமே தங்கம்




அமெரிக்காவில் உள்ள வேலையில்லா திண்டாட்டம்... அமிஞ்சிக்கரை பெண்ணின் திருமணத்தை தள்ளி போடுமா... ?  போடுகிறதே... தங்கத்தின் விலையில்...  என் பதின் பருவங்களில் என் மாமாவின் நகை கடையில் பனி புரிந்த போது தங்கம் சவரன் விலை வெறும்  மூவாயிரத்து சொச்சம்... எப்போது தங்கம் நகைகளாக மட்டும் பார்க்கப்படாமல்.. ஒரு முதலீடாக கவனிக்க பட்டதோ... அன்றிலிருந்தே இதற்கு ஏறுமுகம்தான். இப்போது பவுன்... கிட்டத்தட்ட இருபத்திமூன்றாயிரம்.   சொக்கா.. பெண்ணை பெற்றவன் கதி... நம் உயிரை தவிர.... நம்மை சுற்றியிருக்கும் எல்லாவற்றிருக்குமே மதிப்பு கூடிக்கொண்டே போகிறது.

பெட்ரோல் பூதம்

தங்கத்தை விட்டு தள்ளுங்கள்... அதை விட பல மடங்கு மதிப்பு மிகுந்ததாய் அசுரத்தனமாய் பலம் பெற்றுக்கொண்டிருக்கிறது பெட்ரோல் என்னும் பூதம். சென்ற வாரத்தில் வேலை முடிந்து வீட்டிக்கு திரும்புகையில் ஒலிம்பியா டெக் பெட்ரோல் பங்க் அருகே திருவிழா கூட்டம். நான் கூட பவர் ஸ்டார் தான் எதோ படபிடிப்புக்கு வந்திருக்கிறார் என நினைத்தேன். அப்புறம்தான் தெரிந்தது... விலை ஏற்ற உயர்வு போராட்டங்களை அமுக்க பெட்ரோலை பதுக்கிய களவாணித்தனம்.  அவனவன்... எதோ.... தாகத்திற்கு தண்ணி கேட்டு கிடைக்காமல் செத்து விடும்  மன நிலையில் இருந்தார்கள். என் ஹோண்டா பெட்ரோல் மீட்டர் வேறு சிவப்பில் நீந்திக்கொண்டிருந்தது. நாம் என்ன ரஷிய புரட்சி போராட்டக்காரர்களின் புதல்வர்களா... அப்பிராணி தமிழர்கள்... கொஞ்ச நேரம் பரிதாபமாய் பார்த்து விட்டு... கடைசியாய் கிளம்பும் போது... ஆத்மா திருப்திக்காய் கொஞ்சம் கெட்ட வார்த்தைகளை யார் காதிலும் விழுந்துவிடாதபடி தனக்குள்ளே சொல்லிக்கொண்டு  கலைந்து   போக ஆரம்பித்து விட்டோம்.



விகடன் பக்கம்

இந்த வார கவர் ஸ்டோரி தான் விகடனில் டாப். பைக் ரேசர்கள் பற்றிய அந்த கட்டுரையே படித்ததில் இருந்து எதிரில், பின்னால்.. பக்கவாட்டில்.. இடம் வலம் என என்னை கடந்து போகும் எல்லோருமே பைக் ரேசர்கள் போலவே ஒரு பீதியே கிளப்பினார்கள்.சிக்னலுக்கு  சிக்னல் ... ஹெல்மெட்  போடாமல்  வந்தாலே ... கோழி  அமுக்குவது  போல  அமுக்கும்  நம் போலீஸ்  நண்பர்கள் .. கையில்  வாக்கி  டாக்கி இருந்தும் இதை தடுக்க முடியாதவர்களாக இருப்பது மிகுந்த வியப்புக்குள்ளானதாக இருக்கிறது.   அது சரி.. நம்மாளுக... பம்மி பம்மி வருபவனைத்தான்  பாஞ்சு பாஞ்சு  புடிப்பாய்ங்க....



இசை




சகுனியில் ஒரு மெலடி... அப்படியே உருக வைக்கிறது. "மனசெல்லாம் மழையே" என தொடங்கும் அந்த பாடல்தான் இப்போதைய ஹாட் கேக்.

Comments

  1. //சென்னையின் உண்மையான மண்ணின் மைந்தர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள்... என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்...?//

    என்னைப் போன்ற பல 'உண்மையான சென்னை மண்ணின் மைந்தர்கள்' எல்லாரும் வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அது தான் உண்மை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....