மனம் கொத்திப் பறவை - விமர்சனம்



விகடனில் வந்த இயக்குனர் எழிலின் பேட்டியும், இமானின் இரண்டு பட்டாசான பாடல்களும், கேட்சியான டைட்டிலும், சிவ கார்த்திகேயன் என்னும் துருப்புசீட்டும் முதல் நாளே படம் பார்க்கும் விருப்பத்தை தந்திருந்தது. ஆனால், பத்தோடு பதினொன்று போலான காதல் படம்தான் இதுவும். முதல் பாதியில் கொஞ்சம் காமெடி, இரண்டாம் பாதியில் கொஞ்சம்  கடி என எந்த விதமான அதிர்வும் தராமல் படம் நம்மை கடந்து போகிறது.




காதல்... மனசை சுகமாய் கொத்தி செல்லும் அன்னப்பறவைதான்..எப்போது? நம்முள் நாம் அதை  தெளிவாய்  உணரும் போது.... அந்த உணர்வுகள் நமக்குள் கொடுக்கும் இனம் புரியா சந்தோஷமும்.... நம்மையும் சிறகு விரித்து பறக்க செய்யும் உற்சாகமும்.... காதல்... மனசை சுகமாய் கொத்தி செல்லும் பறவைதான். ஆனால் இந்த படத்தின் பிரச்சனையே... அந்த காதலை நம்முள் உணர வைக்க தவறியதுதான். காதலையும் காமெடி போலவே லைட்டாய் எடுத்துக்கொள்ளும் ஹீரோ, ஹீரோவை காதலிக்கிறோமா... இல்லை குடும்பத்தை  காதலிக்கிறோமா என குழப்பியடிக்கும் ஹீரோயின் என ஒட்டியும் ஒட்டாத கேரக்டர்கள் அவர்களின் காதல் மீதோ, அல்லது படத்தின் கதை மீதோ நமக்கு  ஈடுபாடு வருவதை அநியாயமாய்  தவிர்க்கிறது.   


எதிர் எதிர் வீட்டில்... சிறு வயது முதலே ஒன்றாய் வளரும் ஹீரோ ஹீரோயின்.. ஹீரோயின் மீதான ஒருதலை காதல்.. ஹீரோயினின் அடாவடி குடும்பம், காதலை சேர்த்து வைப்பதற்காய் சோறு தண்ணி இல்லாமல் ஹீரோவுக்காக உழைக்கும் நண்பர்கள் கூட்டம் என முற்பாதி கொஞ்சம் காமெடி, கொஞ்சம் நல்ல பாடல்கள் என நகர்ந்து விட்டாலும்... இரண்டாம் பாதி சரி சமமாய் பொறுமையே சோதிக்கிறது... அதுவும் நாம் பார்த்து பார்த்து சலித்து போன காட்சிகள்.. அதே ரூட்டில் பயணம் செய்யும் போது கொட்டாவி வருவதை சத்தியமாய் தடுக்க முடியவில்லை. 




சிவ கார்த்திகேயன், குழந்தை தனமாய் முகத்தை வைத்துகொள்ளும் போதும்... ஹீரோயனிடம் வழியும் போதும் அநியாயத்திற்கும் ஸ்கோர் செய்கிறார். ஆனால் அதே உடல் மொழியே சீரியசான காட்சிகளிலும் காட்டும் போது எடுத்த ஸ்கோர் எல்லாம் மைனசில் கரைகிறது.

புதுமுகம் ஆத்மியா... கண்டதும் காதலிக்கலாம் போலத்தான் இருக்கிறார். ஆனால் படு குழப்பமான அந்த கேரக்டரேஷன் அவரை ரசிக்க விடாமல் இம்சிக்கிறது. தன் விருப்பம் இன்றி தன்னை கடத்தி வந்து விட்டார்கள்  என அவ்வளவு சீரியாசாய் வசனம் பேசும் ஹீரோயின், அடுத்த ரீலிலேயே... வந்தது வந்துட்டோம்... ஓகே ரெண்டு மாசம்  ஜாலியாய் இருந்துட்டு போகலாம் என்கின்ற மனநிலைக்கு மாறி விடுவது செமையாய் இடிக்கிறது யுவர் ஆனர்.


பெரிய பெரிய லாஜிக் குளறுபடிகளால்...படம் ரெண்டாம் பாதியில் மட்டையாகிவிடுகிறது. உதாரணத்திற்கு,  படு பயங்கர பில்ட் அப்போடு.... வில்லன் வருகிறார்...தான் திருமணம் செய்யவிருக்கும் ஹீரோயினை கடத்திய  ஹீரோவை கண்டுபிடித்து பொடிமாஸ் ஆக்குவேன் என சூளுரைத்து விட்டு சுமோ ஏறுகிறார். படம் முடிந்து வணக்கம் போட்ட பின்பும் அவர் வந்த பாடில்லை. ஹீரோயின் கிடைக்காத வருத்தத்தில் அப்படியே காசி, கயா என்று போய் நர மாமிசம் தின்னும்  சாமியார் ஆகிவிட்டாரா என்று சந்தேகம். 
 இத்தனை குழப்ப கும்மிகளுக்கு மத்தியிலும், சிங்கம் புலி, சாம்ஸ் போன்றவர்களின் காமெடி ஏரியா.. கொஞ்சம் ரசிக்க வைக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஐயோ... மீண்டும் ஒரு பருத்தி வீரனா என நடுங்கும் போதே... ஹீரோயினின் அடாவடி குடும்ப மெம்பர்களை காமெடி பீசுகளாக்கி கொஞ்சம் ரிலாக்ஸ் செய்கிறார்கள். 


இமானின்... ஜல் ஜல் ஜல் ஓசை... அம்சமான இசை கோர்வை... அதை ரசிக்க விடாமல் செய்திருப்பத்தில்தான் இயக்குனரின் சாமர்த்தியம் ஒளிந்திருக்கிறது.

ரொம்பவும் ரிஸ்க் எடுக்காமல்.. .உலக சினிமா.. உள்ளூர் சினிமா என தரம் பிரிக்காமல்... மென்மையாய் ஒரு காதல் படம் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் எழில். இரண்டாம் பாதியில் கொஞ்சம் ஹோம் வொர்க் செய்திருந்தால் படத்தை இன்னமும் நன்றாக தேற்றியிருக்கலாம்.



(+) பிளஸ்

முதற்பாதி காமெடி
பாடல்கள்


(-) மைனஸ்

மொத்த இரண்டாம் பாதியும்.
லாஜிக்

VERDICT : எதிர்பார்ப்பின்றி போனால் முதற் பாதியில் சிரிக்கலாம். இரண்டாம் பாதியில் தூங்கலாம்.

RATING    : 4.0/10.0


EXTRA பிட்டுகள்.

வெள்ளிகிழமை முதல் நாள் இரவுக்காட்சி.. உதயத்தில்.. கூட்டத்தோடு கூட்டமாய் பம்மி பம்மி படம் பார்த்துக்கொண்டிருந்த சிவ கார்த்திகேயனை அடையாளம் கண்டு கொண்ட ரசிகர்கள்   இடைவேளையில் சந்தோசத்தோடு துரத்த... அவர்களிடம்  இருந்து தப்பித்து ஆப்ரேட்டர் ரூமில் தஞ்சமடைந்தார் சிவா. இரண்டாம் பாதியில்... கிளைமாக்ஸ் கொடுத்த காண்டில் .... சிவா படம் முடிவதற்கு ஐந்து நிமிடம் முன்பாகவே எஸ்கேப்.

நிறைய சினி ஆட்களை.. விஜய் டிவி பிரபலங்களை காண முடிந்த்தது. எல்லோரும் ரசிகர்களின் பல்ஸ் பார்ப்பதற்காக வந்திருப்பார்கள் போல.. படம் நன்றாக இருந்ததா.. இல்லையா என ஒரு வித  குழப்பத்தோடு வெளி வரும் ரசிகர்களின் முக ரியக்க்ஷன்களை படிக்க நிச்சயம் ரொம்ப சிரமப்பட்டிருப்பார்கள்.









Comments

  1. நல்ல விமர்சனம். மார்க் 3/10 க்கு மேல் தேறாது.
    சிவகார்த்திகேயனை நடிப்புக்கும், எழிலை கதை எழுத, சொல்லவும்
    டியூசன் அனுப்ப வேண்டும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....